கோப்புப்படம்
Tamilnadu

கொட்டும் மழை; தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிதி ஒதுக்க பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர், மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், தமிழ்நாடு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் பற்றியும் பிரதமர் அவர்களுக்கு எடுத்துரைத்து, தமிழகத்தின் மாநில பேரிடர் நிதியானது கொரோனா நிவாரணப் பணிகளுக்கும், இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் நிதியிலிருந்து போதுமான நிதியினை ஒதுக்கீடு செய்துதர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து கேட்டறிந்த பிரதமர் அவர்கள், தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதாகவும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை நல்குவதாகவும் உறுதியளித்தார்.

Also Read: "மக்கள் அஞ்ச வேண்டாம்..160 நிவாரண முகாம்கள் தயார்": முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!