Tamilnadu

“பகலில் மெக்கானிக் வேலை.. இரவில் திருட்டு தொழில்” : பிரபல வாகன திருடன் போலிஸில் சிக்கியது எப்படி?

சென்னையில், புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடு போனதாக போலிஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து, வட சென்னை முழுவதும் போலிஸார் தனிப்படை அமைத்து இருசக்கர வாகன கொள்ளையனை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், குமார் என்பவர் திவொற்றியூர் ரயில் நிலையம் அருகே நிறுத்திய இருசக்கர வாகனம் காணவில்லை என போலிஸில் புகார் தெரிவித்தார். பின்னர் போலிஸார் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டர்.

இதில் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் வாகனத்தைத் திருடிச் சென்றது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலிஸார் ஜெகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஜெகன் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் பகலில் மெக்கானிக்கா வேலை பார்த்துக் கொண்டு இரவு நேரங்களில் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி, காஜா மைதீன் என்பவரிடம் விற்று வந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து காஜா மைதீனையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த குற்றவாளிகளை கைது செய்த போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: பாபா கோவிலில் போதை ஆசாமி அட்டகாசம்; CCTV காட்சியை கண்டு போலிஸ் அதிர்ச்சி; எண்ணூரில் ருசிகர சம்பவம்!