Tamilnadu

“அறைக்குள் சிக்கிய 1½ வயது குழந்தை” : நவீன தொழில் நுட்ப உதவியுடன் குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர் !

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் சிவச்சந்திரன். தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை தர்ஷித்துடன் கரூர் அருகே காளியப்பனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தீபாவளிக்காக வந்தனர்.

இன்று இரவு ஒன்றரை வயது தர்ஷித் உறவினர் வீட்டில் உள்ள அறை ஒன்றில் தூங்க வைத்து விட்டு பட்டாசு வெடி காரணமாக தாய் கதவை வேகமாக சாத்தியதாக கூறப்படுகிறது. வேகமாக சாத்தியதால், தானியங்கி முறையில் பொருத்தப்பட்ட அறைக் கதவு தானாக பூட்டிக் கொண்டது. குழந்தை அறைக்குள் சிக்கிக் கொண்டது.

இந்நிலையில், சிறிது நேரம் கழித்து குழந்தையின் அழுகுரல் கேட்டு, பெற்றோர் உறவினர்களும், கதவை திறக்க முயன்றனர். உடனடியாக கதவை வெளியிலிருந்து திறக்க முடியாத காரணத்தால் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஜன்னல் வழியாக செல்போனை ஒரு குச்சியில் கட்டி வைபை தொழில்நுட்ப உதவியுடன் கேமரா மூலம் தானியங்கி பூட்டை திறந்து குழந்தையை மீட்டனர். சுமார் அரை மணி நேரம் பூட்டிய கதவுக்குள் குழந்தை அழுத நிலையில் இருந்ததைக் கண்டு பெற்றோர் பதறினர். தீயணைப்பு துறையினர் அதி நவீன தொழில் நுட்பங்களை பயன் படுத்தி அரை மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டதால் சிவச்சந்திரன் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.

Also Read: “ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்ட மற்றொரு குற்றவாளி கைது”: அதிரடி நடவடிக்கை எடுத்த போலிஸ்!