Tamilnadu

“80 வயசாகுது நேர்ல வந்து பாத்துருக்கேன்; 10 வருஷமா நீங்க என்ன பண்ணீங்க?”: EPS-OPSக்கு துரைமுருகன் கேள்வி!

முல்லைப் பெரியாறு அணையில் இன்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர்களும் பங்கேற்றனர்.

ஆய்வுக்கு பின்பு தேக்கடியில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் ஆய்வு மாளிகையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய நீர்வள ஆணையம் உத்தரவின் பேரில் "ரூல்கர்வ்" முறைப்படி நவம்பர் 10 வரை அணையின் நீர்மட்டம் 139.50 அடியாகவும், நவம்பர் 30ஆம் தேதியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லாமல் அது குறித்து பேசுவதற்கு அ.தி.மு.க.,விற்கு எந்த உரிமை இல்லை. நவம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.கவின் போராட்டத்தை கண்டு மக்கள் நடுநடுங்கிப் போய் உள்ளனர் என கிண்டல் அடித்தார். எனது 80வயதிலும் தள்ளாடி முல்லைப் பெரியாறு அணையை நான் பார்வையிட்டுள்ளேன்.

ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் உள்பட அ.தி.மு.க.,வினர் யாரும் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடவில்லை. பேபி அணையை பலப்படுத்தவதற்காக அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள அரசு வனத்துறையை காரணம் காட்டுகின்றனர்.

விரைவில் பேபி அணையை பலப்படுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆட்சி காலத்திலே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என தான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தலைகுனிந்து 30 வினாடி மவுனம்.. புனீத் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா !