Tamilnadu

சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட மேலாளருக்கு அடி உதை.. அடிதடி ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது - போலிஸ் அதிரடி!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பிரபல மெக்டொனால்ட் உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த உணவகத்திற்கு வந்த ஓசூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ், அர்ஜுன், கார்த்திக், மணி ஆகிய 4 பேரும் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் தாங்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளனர்.

அப்பொழுது உணவகத்தின் மேலாளர் சூளகிரியைச் சேர்ந்த ஹரிஷ் இவர்களிடம் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்குமாறு கேட்டபோது, பில் தொகை கொடுக்க மறுத்து அந்த 4 பேரும் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கடுமையாக தாக்கியுள்ளன. மேலும் உணவகத்தில் இருந்த கம்ப்யூட்டர், செல்போன், சுவைப்பிங் மிஷின், உள்ளிட்டவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இதனையடுத்து காயமடைந்த உணவக மேலாளர் ஹரிஷ் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேலாளர் ஹரீஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூளகிரி போலிஸார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட கணேஷ், அர்ஜுன், கார்த்திக், மணி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் கணேஷ் மற்றும் அர்ஜுன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரபல உணவகத்தில் சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் 4 பேரும் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Also Read: “பள்ளிப்படிப்பை கைவிட்ட 1,28,000 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்”: அமைச்சர் நெகிழ்ச்சி!