Tamilnadu

"திருடர் குல திலகம்... 6 மாதங்களில் 100 டூவீலர்கள் திருட்டு" : பலே கொள்ளையன் போலிஸில் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கொத்தமங்கலம், ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் காணாமல் போனது குறித்து போலிஸாருக்கு அதிகமான புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து இருசக்கர வாகன கொள்ளையர்களைப் பிடிக்க போலிஸார் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர். மேலும் வாகனம் திருடப்பட்ட இடங்களிலிருந்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தைத் திருடும்போது பொதுமக்களிடம் பிடிபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அந்த இளைஞரைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதில் அவர் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பதும், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது.

மேலும், ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகள், நெருக்கமாக இருக்கும் கடைவீதிகளிலேயே கண்ணன் வாகனங்களைத் திருடிவந்துள்ளார். திருடிய வாகனங்களை தனக்குத் தெரிந்த மெக்கானிக்குகள் மூலம், நம்பர் பிளேட் மாற்றிக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் திருடி வைத்திருந்த 32 இருசக்கர வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

பின்னர், கண்ணனை போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 6 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடிய குற்றவாளியைக் கைது செய்த போலிஸாருக்கு புதுக்கோட்டை மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: “வீட்டின் ஓட்டை பிரித்து சொந்த பேத்தியின் நகையைத் திருடிய தாத்தா” : பாலக்காட்டில் நடந்த துணிகரம்!