Tamilnadu

அவமதிப்பதாக முறையிட்ட பெண்... அதிரடி ஆய்வில் இறங்கி அந்தப் பெண்ணுடனே உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும் அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என்றும் பழங்குடியின பெண் ஒருவர் அண்மையில் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

அந்தப் பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்தக் கோயிலில் ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற அன்னதானத்தில், முறையிட்ட பழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர் சேகர்பாபு. பின்னர் அவர்களுக்கு தீபஒளித் திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்த ஸ்தலசயன பெருமாள் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளுக்கு ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜைகள் வரும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி தொடங்குகிறது.

பழங்குடியினர் என்பதால் கோயிலில் அன்னதானம் மறுக்கப்பட்டதாக முறையிட்ட பெண் உள்ளிட்ட மக்களுடன் இன்று நான் உணவருந்தி உள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

முறையிட்ட பெண்ணின் மனத்துயர் போக்கி, அவருடனே அமர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபுவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “கோபாலபுரம் இல்லம் வந்தது நெஞ்சில் நிழலாடுகிறது” : புனீத் ராஜ்குமார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!