Tamilnadu

பார்லருக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி ரவுடிகள் ரகளை; அராஜக பேர்வழிகள் சிக்கியது எப்படி?

சென்னை வேளச்சேரி 100 அடி ரோடு பியூட்டி பார்லர் உள்ளே சென்று கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய முக்கிய குற்றவாளிகள் இருவரை சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் கிரியேட்டிவ் சலூன் அண்ட் ஸ்பா என்ற பெயரில் தனியார் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரில், 26 ஆம் தேதி மதியம் சுமார் 12.50 மணியளவில் வெள்ளை உடை அணிந்த நபருடன் 5 பேர் கொண்ட கும்பல் பட்டாக் கத்தியுடன் வந்துள்ளனர். வந்த உடனேயே பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதற்கு ஸ்பா ஊழியரான அன்புரோஸ் பெர்னாண்டஸ் என்பவர் தரமறுத்துள்ளார். ஆத்திரமடைந்த கும்பல் அவரது தலையில் பட்டாக் கத்தியால் தாக்கிவிட்டு, அங்கிருந்த பெண்களின் கைப்பையில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம், 7 செல்போன்கள், மற்றும் 5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஒரு பெண்ணின் நெற்றியில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் இருவரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிரட்டி விட்டு செல்வதற்கு முன்பாக போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் மசாஜ் சென்டர் உரிமையாளர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வேளச்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் இருவரை கைதுசெய்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் தேனாம்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் அவனது கூட்டாளி மணிகண்டன் என தெரிய வந்து. இதனையடுத்து இருவரையும் வேளச்சேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.