Tamilnadu

வீட்டை எழுதிக் கொடுக்க மறுத்த கணவன்: கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கொலை செய்ய முயன்ற மனைவி கைது!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த வேம்பாரை கிராமத்தைச் சேர்ந்தவர் இனிகோ. இவரது மனைவி மரியவினோ. இந்த தம்பதிக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.

இந்நிலையில், கணவன் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும் என மனைவி மரியவினோ தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, சம்பவத்தன்று இனிகோ வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி வீட்டைத் தனது பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மரியவினோ வீட்டின் சமையில் அறையின் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து கணவன் இனிகோ மீது ஊற்றியுள்ளார்.

இதில் உடல் வெந்த நிலையில், எரிச்சல் தாங்காமல் இனிகோ அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்,வீட்டிற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து மனைவி மரியவினோவிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.இதில் கணவன் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. பின்னர் மரியவினோவை போலிஸார் கைது செய்தனர்.

Also Read: 18 கிலோ கஞ்சாவை சென்னைக்கு கடத்திவந்த கும்பல்.. RPF வீரர்களை பார்த்ததும் எஸ்கேப் : தீவிர தேடுதல் வேட்டை!