Tamilnadu

11 வது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

சென்னை அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதியரின் மூத்த மகன் அக்ஷயராஜ். இவருக்கு 2013ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிறுநீரகப் பிரச்சனைக்காக சிறுவன், மருத்துவர்கள் ஆலோசனையின்படி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். இருந்தபோதும் சிறுவனுக்கு சிறுநீரகம் செயலிழந்தது. இதனால் டயாலிசிஸ் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறுவன் அக்ஷயராஜ் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வந்தார். சிறுவனைக் கண்காணித்து வந்த மருத்துவர்கள் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

பின்னர் சிறுவனின் பாட்டி மணிமேகலை, பேரனுக்காக தனது ஒரு சிறுநீரகத்தை கொடுப்பதாக கூறினார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து பாட்டியிடம் இருந்து எடுத்த சிறுநீரகத்தைப் பேரனுக்கு பொருத்தினர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிறுவன் அக்ஷயராஜ் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் குறைந்தது ரூ.15 லட்சம் செலவாகியிருக்கும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தினால் சிறுவனுக்கு இலவசமாகச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனையில் சிறுவனுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிசிக்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 1 லட்சம் என்ன 2 கோடி கூட கட்ட தயார்; ஆனால்.. வேதனையில் நடிகர் விஜய்; நீதிபதிக்கு முக்கிய கோரிக்கை!