Tamilnadu

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற துரை வைகோ!

ம.தி.மு.கவின் தலைமை கழக செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட துரை வைகோ இன்று தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கடந்த அக்டோபர் 20-ம் தேதி ம.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்படி, ம.தி.மு.க தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டு, முழுநேர கழகப் பணியை மேற்கொள்ள அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ம.தி.மு.கவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் துரை வைகோ மரியாதை செலுத்தினார். மேலும் மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ம.தி.மு.கவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரை வைகோ, “வலதுசாரி சிந்தாந்தத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை நான் முன்னெடுப்பேன்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “தி.மு.க அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மென்மேலும் வளர்ந்து வானைத் தொடும்” : வைகோ வாழ்த்து!