Tamilnadu

நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகளை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற கும்பல்.. பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்!

புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்ற பம் ரவி. ரவுடியான இவர் மீது கொலை வழக்குகள் உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த ரவி, தனது நண்பரான அந்தோணி ஸ்ரீபனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் ரவியின் பைக்கை வழிமறித்துள்ளனர்.

அப்போது அவர்கள் மறைத்து வந்திருந்த நாட்டு வெடிகுண்டை இவர்கள் மீது வீசியுள்ளனர். இதில் தப்பிய இரண்டு பேரும், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்துள்ளனர். முதலில் அந்தோனியை துரத்திப் பித்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதைத்தொடர்ந்து ரவியையும் விரட்டிச் சென்று வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து நடுநோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தனியாக இருந்த மூதாட்டிக்கு நடந்த கொடூரம்.. நண்பருடன் சேர்ந்து இளம்பெண் நடத்திய ‘பகீர்’ கொள்ளை!