Tamilnadu

ஆசியாவின் மூன்றாவது பெரிய ஊராட்சி... வில்பட்டி பஞ்சாயத்து தலைவி பதவியேற்பில் கலந்துகொண்ட தி.மு.க MLA!

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கிய லெட்சுமி ராமசந்திரன் பதவி ஏற்பு விழாவில் பழனி தி.மு.க எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் பங்கேற்று வாழ்த்தினார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஒன்றியம், வில்பட்டி முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க ஆதரவு பெற்ற வேட்பாளர் பாக்கியலெட்சுமி வெற்றி பெற்றார்.

வில்பட்டி ஊராட்சி ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய ஊராட்சியாகக் கருதப்படுகிறது. இந்த ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கியுள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 12,500 வாக்காளர்கள் உள்ளனர்.

வில்பட்டி ஊராட்சித் தலைவருக்கான இடைத்தேர்தலில் தி.மு.க ஆதரவு பெற்ற வேட்பாளர் பாக்கியலட்சுமி சுமார் 2,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஊராட்சி தலைவராகப் பதவியேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, ஒன்றிய குழு தலைவர் சுவேதா ராணி, துணைத் தலைவர் முத்துமாரி, பி.டி.ஒ., விஜயசந்திரிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசுகையில், ''ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும். ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியாக உள்ளதால் முக்கியத்துவம் அளித்து முன்மாதிரி ஊராட்சியாக மாற்றப்படும்'' என்றார்.

Also Read: பதவியேற்கும் முன்பே வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்.. காஞ்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!