Tamilnadu

பதவியேற்கும் முன்பே வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்.. காஞ்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்ததால், பாலாறு, செய்யாறு, வேகவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது. இதனால் பாலாற்றின் குறுக்கே திருமுக்கூடல் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிந்தது. மாகறல் செய்யாற்று பகுதியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை தற்போது இரண்டாவது முறையாக இந்த மாதத்தில் நிரம்பி வழிந்தது. இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையில் வந்த நீரை பொதுப்பணித்துறையினர் சுமார் 100 ஏரிகளுக்கு திருப்பிவிட்டு ஏரி நிரம்ப பணியைத் துவக்கினர்.

இந்நிலையில், காவாந்தண்டலம் உள்ளாட்சி தேர்தலின் போது, கிராம மக்களுக்கு தி.மு.க வேட்பாளர் ராதாவிஜியகுமார் செய்யாற்று ஒட்டி செல்லும் காவாந்தண்டலம் ஏரி வரத்துக் கால்வாய் சீரமைப்பு செய்து முப்போகம் விளையும் வகையில் நீர் சேமிக்கப்படும் என வாக்குறுதியளித்தார். தற்போது நீர் நிரம்பி வழிவதால் இன்று பதவியேற்கும் முன்பே தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பொதுப்பணித்துறையிடம் இணைந்து 2 கிலோ மீட்டர் நீர்வரத்து கால்வாயை சீரமைத்துள்ளனர்.

தற்போது கால்வாய் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதனையடுத்து இன்று பொதுப்பணித் துறை அனுமதி பெற்று அவர்கள் முன்னிலையில் செய்யாற்று சேமிக்கப்பட்டு மீதம் வரும் உபரி நீரினை காவந்தண்டலம் கிராம ஏரிக்கு செல்லும் வகையில் தடுப்பணை மதகு திறக்கப்பட உள்ளது. கிராம ஏரி நிரம்பி வழிந்தால் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் 3 போகும் சிறப்படையும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read: “சாவர்க்கரின் வரலாற்றுச் சரிவுகளைச் சரி செய்ய துடிக்கும் ஒன்றிய அமைச்சர்கள்” : பாடம் புகட்டிய ‘முரசொலி’!