Tamilnadu

காரை ஓட்டிப் பார்க்க எடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம் : கிருஷ்ணகிரியில் சோகம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தவர் அமராவதி. இவர் தருமபுரியில் வசித்துக் கொண்டு தினமும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.

தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு நேரத்திற்கு வந்து செல்வதில் சிரமம் இருந்துள்ளது. இதனால், பள்ளி ஆசிரியர் அமராவதி கார் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் காருக்கு ஓட்டுநரை நியமித்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல கார் அருகே வந்துள்ளார்.

அப்போது, கார் ஓட்டுநர் டீ குடிக்க கடைக்குச் சென்றுள்ளார். இதனால் அமராவதி தானே காரை ஓட்டிப் பார்க்கலாம் என நினைத்து காரை எடுத்துள்ளார். அமராவதி காரை ஸ்டார்ட் செய்த அடுத்த நொடியே எதிரே இருந்த சுவரில் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் அமராவதிக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்களும், மாணவர்களும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கார் ஓட்ட முயன்றபோது பள்ளிச் சுவரில் மோதி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி... 3 பேர் கைது : நடந்தது என்ன?