Tamilnadu

“மாடுகளை திருடி ஆன்லைன் மூலம் விற்க முயன்ற கும்பல்” : போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை - எப்படி நடந்தது ?

சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கன்றுக் குட்டிகளுடன் இரண்டு மாடுகள் மற்றும் சினையுடன் ஒரு மாட்டை வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி வீட்டில் கட்டியிருந்து அனைத்து மாடுகளும் திருடுபோனதைக் கண்டு ரமேஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆன்லைனில் கன்றுக்குட்டியுடன் மாடுகள் விற்கப்படுவதாக ரமேஷுக்கு தகவல் வந்துள்ளது. பின்னர் அந்த ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்தபோது, விற்பனைக்கு இருந்த கன்று குட்டியும் மாடும் தன்னுடையது என்பதை உறுதிசெய்தார். பிறகு உடனே இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் யோசனைப்படி ரமேஷ் மாட்டை வாங்கிக் கொள்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அப்போது, அவர்களை ரமேஷை கம்பனூர் அருகே உள்ள கொங்கறுத்தியில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றிற்கு வருமாறு கூறினார். பிறகு அவருடன் போலிஸாரும் அங்குச் சென்றனர்.

அப்போது தோட்டத்தில் மூன்று மாடுகளும், கன்று கட்டிகளும் இருந்தது. தனது மாடுகளைப் பார்த்து ரமேஷ் உற்சாகமடைந்தார். அங்கிருந்தவரிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் மூன்று பேர் மாடுகளை இங்கு விட்டுச் சென்றதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த கும்பல் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: உஷார்.. இரவு முழுவதும் சார்ஜ் ஏறியதால் வெடித்து சிதறிய செல்போன் - இளைஞருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா?