Tamilnadu

பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி : பெட்ரோல் பங்கில் நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் இன்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டுவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.

பின்னர், திடீரென வாகனம் சாலையின் நடுவே நின்றுள்ளது. இதனால் வாகனத்தை மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றனர். அங்கு வாகனத்தைப் பரிசோதித்த மெக்கானிக்குகள் பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதால்தான் வாகனம் நின்றுள்ளது என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அந்த பெட்ரோல் பங்கிற்கு வந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பெட்ரோலை கேனில் பிடித்துப் பார்த்தபோது தண்ணீர் கலந்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் வாகன ஓட்டிகளைச் சமாதானம் செய்தனர். பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்களை போலிஸார் எச்சரிக்கை செய்தனர். இதுபோன்று அடுத்த முறை நடந்தால் பெட்ரோல் பங்க் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளரை போலிஸார் எச்சரித்தனர்.

Also Read: "கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவர், மகன்” : போலிஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!