Tamilnadu

“டாஸ்மாக் ஊழியர் உடலில் இருந்த துப்பாக்கி குண்டு.. துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை?” : ‘பகீர்’ தகவல்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகின்றது. இதன் மேற்பார்வையாளராக ஆறுமுகம் என்பவரும் விற்பனையாளர்களாக வாரணவாசி பகுதியை சேர்ந்த 43 வயதாகும் துளசிதாஸ், கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த ராமு என்பவரும் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 04ம் தேதி எப்போதும் போல் இரவு விற்பனை நேரம் முடிந்தவுடன் கடையை பூட்டி விட்டு விற்பனையாளர்கள் துளசிதாஸ் மற்றும் ராம் ஆகிய இருவரும் கடையின் பின்புறம் உள்ள மதுபானக் கூடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியை எடுப்பதற்காக வந்துபோது அங்கு மறைந்திருந்த சில மர்ம நபர்கள் துளசிதாஸை கத்தியால் கடுமையாக தாக்கினர். இதை தடுக்க வந்த மற்றொரு விற்பனையாளர் ராமவையும் கத்தியால் குத்தி உள்ளனர்.

மார்பருகே கத்தியால் குத்தப்பட்ட துளசிதாஸ் மிகுதியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் படுகாயத்துடன் போராடிக்கொண்டிருந்த ராமை மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த துளசிதாசன் சடலத்தை மீட்டு உடற்கூறுபரிசோதனைக்கு அனுப்பி வைத் தனர். சம்பவ இடத்திற்கு திருப்பெரும்புதூர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்தார். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திலேயே பலியான துளசிதாஸ் உடலிலிருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து துப்பாக்கி குண்டை அகற்றி உள்ளதால் கொலையாளிகள் துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டது உறுதியாகியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க போலிஸாரின் தனிப்படை தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனையில் டாஸ்மாக் ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “புதிய அரசியல்வாதியான அண்ணாமலை ஒன்றிய அரசின் உத்தரவை முதலில் படிக்க வேண்டும்”: பாஜகவுக்கு முரசொலி பதிலடி!