Tamilnadu

திருமணமான பெண்ணுக்கு தொடர் தொந்தரவு; பெட்ரோல் ஊற்றி எரிந்தபடி வந்த வாலிபர் பலி - திருவள்ளூரில் பயங்கரம்!

பொன்னேரி அருகே பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் அலறிய வாலிபர் மருத்துவமனையில் உயிரிழப்பு. 6 பேர் தன்னை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்ததாக உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல். முன்கூட்டியே பெட்ரோலை கேனில் வாங்கியதால் தற்கொலையா? என போலிஸார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூரை சேர்ந்தவர் கோபி (33). இவர் நேற்று காலை நாலூர் ஏரிக்கரையில் உள்ள புதரில் இருந்து தம்மை 6 பேர் கொண்ட கும்பல் தீவைத்து கொளுத்தி விட்டதாக உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து உடலில் தீக்காயங்களுடன் வெளியே வந்தார்.

அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நள்ளிரவில் கோபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 6 பேர் தம்மை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கோபி கூறியது குறித்து மீஞ்சூர் போலிஸார் விசாரணை நடத்தினர்.

இதில் கோபிக்கு திருமணமாகாத நிலையில் ஒரு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதில் ஒருவர் தமக்கு திருமணமாகி குடும்பம் வந்துவிட்டதால் தம்மை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று தீக்காயம் ஏற்படுவதற்கு முன்பு பெட்ரோல் பங்கில் தமது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு கொண்டு கேனில் பெட்ரோலை வாங்கி வண்டியில் வைத்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கோபி சிறிது நேரத்தில் தீக்காயங்களுடன் வந்தது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கோபி தன்னை தானே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என மீஞ்சூர் போலிஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Also Read: “T-Shirts வாங்க குவிந்த மதுரை மக்கள்.. கடைக்கு பூட்டுப்போட்ட காவல்துறை” : காரணம் என்ன?