Tamilnadu

ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து: எரிந்த நிலையில் கணவன் - மனைவி சடலமாக மீட்பு - என்ன நடந்தது?

மதுரை ஆனையூர் எஸ்.வி.பி நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதியில் சக்திகண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இயற்கை பொருட்கள் அங்காடி விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவி சாப்ட்வேர் துறையில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவில் வீட்டு அறையில் உள்ள ஏசியில் திடிரென மின் கசிவு ஏற்பட்ட நிலையில் புகை உருவாகியுள்ளது. இதனால் அறையினுள் இருந்து இருவரும் வெளியே வர முயன்ற நிலையில் தீப் பற்றி எரியத் தொடங்கி, இருவரது உடலிலும் தீப்பற்றி எரிந்து இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.

தொடர்ந்து தீப்பற்றி எரிந்த நிலையில் சக்தி கண்ணனின் மகன் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து தீயை அணைத்து உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த சக்தி கண்ணனுக்கு 17வயதில் காவியா என்ற பெண் குழந்தையும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர். வீட்டு அறையில் உறங்கிகொண்டிருந்த தம்பதியினர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி” : கடலூரில் நடந்த சோகம்!