Tamilnadu

OPS பெயரில் தொடரும் பண மோசடி.. 47 லட்சம் பணத்தை பறிகொடுத்த இளைஞர் : அ.தி.மு.க முக்கிய புள்ளிக்கு தொடர்பா?

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த 2019ம் ஆண்டு இடுக்கியில் ஏலக்காய் எஸ்டேட் ஒன்றை வாங்க முயன்றுள்ளார். இதை அறிந்த பாபு மற்றும் மகேஷ் என்பவர்கள் பிரவீனை சந்தித்துள்ளனர்.

அப்போது அவர்கள், தென்காசியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகன் முருகேசன் என்பவரை தங்களுக்குத் தெரியும் என்றும், எஸ்டேட் வாங்குவதற்கான பணத்தைக் குறைந்த வட்டியில் அவரிடமிருந்து பெற்று தருவதாகவும் பிரவீனிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்துஅவர்கள், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்றும், சேடபட்டி கூட்டுறவு வங்கித் தலைவர் எனவும் கூறி ராஜேந்திரன் என்பவரை பிரவீனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அப்போது ஆவண செலவு மற்றும் பிரோக்கர் கமிஷன் என கூறி பிரவீனிடம் ரூ.47 லட்சத்தை ராஜேந்திரன் பெற்றுள்ளார். மேலும் முத்திரை தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளார். ஆனால் எஸ்டேட் வாங்க வட்டியில் ரூ.10 கோடி தருவதாகக் கூறிய பணத்தை அவர்கள் தரவில்லை.

இது குறித்து பிரவீன் அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது மூன்று பேரும் சேர்ந்து கொண்டு பிரவீனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து பிரவீன் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் இதில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல மாவட்ட அளவில் பல முக்கிய புள்ளிகள் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தி ரூ 44 லட்சம் மோசடி... குற்றவாளியைக் கைது செய்த போலிஸ்!