Tamilnadu

27 பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரியாணிக் கடை!

'வெண்ணிலா கபடி குழு' படத்தில் ஒரு காட்சி வரும். அதில் 50 பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்க வேண்டாம் என பரோட்டா கடை ஒன்றில் அறிவிக்கப்பட்டிருக்கும். இந்த ஆஃபரை பார்த்து நடிகர் சூரி பரோட்டா சாப்பிட்டு அசர வைத்திருப்பார். இந்த காட்சியையே தூத்துக்குடியைச் சேர்ந்த பிரியாணி கடை ஒன்று பீட் செய்துள்ளது.

தூத்துக்குடியில் வி.ஐ.பி என்ற பெயரில் பிரியாணிக் கடை ஒன்று சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அதிரடி ஆஃபரை அறிவித்தது.

அது என்னவென்றால், 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும் நபருக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்குப் பரோட்டா திருவிழா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த தூத்துக்குடி இளைஞர்கள் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு பரோட்டா திருவிழாவில் கலந்துகொண்டு வருகின்றனர். இதையடுத்து இந்த போட்டியில் கலந்துகொண்ட அருண் பிரகாஷ் என்ற இளைஞர் 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு அசத்தியுள்ளார்.

இதையடுத்து வெற்றி பெற்ற அருண் பிரகாஷுக்கு கடையின் உரிமையாளர்கள் அறிவித்தபடியே தங்க நாணயத்தை வழங்கினர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் கண்ணா பாண்டியன், "எங்களது கடையை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம்.

அந்த வகையில் பரோட்டா திருவிழா நடத்தி வெற்றி பெறுபவர்களுக்குத் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். இதற்குத் தூத்துக்குடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “திகில் படங்களை பார்த்தால் ரூ.95,000 பரிசு” : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் - சவாலுக்கு ரெடியா?