Tamilnadu

”சொன்னதோட இருக்காம செய்துக் கொண்டிருக்கிறோம்” - இறுதிகட்ட பிரசாரத்தில் அன்பில் மகேஷ் பேச்சு!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் 6 வது வார்டுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்லமணியை ஆதரித்து வள்ளுவபட்டி, மலையாண்டிப்பட்டி, சரவணம்பட்டி, தோப்புபட்டி, குளத்தூராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி.

அப்போது பேசிய அவர், தொடர்ந்து மக்களுக்காக உழைக்கின்ற தலைவர், இயக்கம் என்றால் அது நமது தமிழக முதல்வர் தான். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்களும் பாராட்டுகின்ற நம்பர் ஒன் முதல்வராக நமது முதலமைச்சர் விளங்கி வருகிறார்.

கடந்த முறை எதிர்கட்சியாக இருக்கும் போது கொரோனா காலத்தில் வாழ்விழந்து நின்ற ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அன்றைய அரசு ஏற்கனவே கஜனாகாலியாக வைத்திருந்தது.

நீங்கள் சொல்லிவிட்டு போய்டுவிங்க என்று கூறி ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். அப்போதே அதிமுக அரசு கஜானா காலி என்று ஒப்புக்கொண்டுவிட்டது. எதிர்கட்சியாக இருந்தபோது சொன்னோம். இன்று ஆளும் கட்சியாக வந்ததும் சொன்னதை செய்து வருகின்றோம்.

ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியதோடு குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையாக ரேசன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கூறினார்.

Also Read: வாட்ஸ் அப் forwardகளை வைத்து குறை கூறுவதெல்லாம் நாகரிகமா? - ஓ.பி.எஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்