Tamilnadu
"5 மாதங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.1,130 கோடி சொத்துகளை மீட்டுள்ளோம்” : அமைச்சர் சேகர்பாபு
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான ரூ.1,130 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். தனியார் உயர்நிலைப் பள்ளியிடம் இருந்து சுவாதீனம் பெறப்பட்ட கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 76 கிரவுண்ட் மைதானத்தை பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
இந்த மைதானத்திற்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் விளையாட்டு மைதானம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அமைச்சர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பி.எஸ்.பள்ளியிடம் இருந்த 76 கிரவுண்ட் இடத்தை முதல்வர் வழிகாட்டுதலின்டியும், நீதிமன்றத் தீர்ப்பின் படியும் இந்து சமய அறநிலையத்துறை வசப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நிலத்தை பயன்படுத்திய பி.எஸ்.பள்ளி பெரும் தொகையை பாக்கியாக வைத்துள்ளது. முதற்கட்டமாக 18 லட்ச ரூபாய் கட்டியுள்ளனர். மீதமுள்ள தொகையை கட்டுமாறி கூறியுள்ளோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் மறைவையடுத்து தி.மு.க தலைவர் பொறுப்புக்கு வந்த மு.க.ஸ்டாலின் கட்சியை கட்டுக்கோப்பாக காத்து நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் இந்திய துணைக் கண்டமே திரும்பிப் பார்க்கின்ற வகையில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் அவரது திறமை, ஆளுமை, சுயமாக, சிந்திக்கும் தன்மை, மனிதநேயம், தொலைநோக்குப் பார்வை உள்ளிட்டவையே காரணம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பை கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்கள் அறிந்திருக்கும் நிலையில், பா.ஜ.க தலைவர்கள் அறியாதது வியப்பை அளிக்கிறது.
இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை, ரோவர் நவீன கருவி மூலம் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலை துறையில் பயன்படுத்தப்படுவது போல கோயிலுக்குச் சொந்தமான அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் எல்லை கற்கள் வைக்கப்படும். அந்தப் பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!
-
“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!