Tamilnadu

“4-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்.. 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு”: அமைச்சர் மா.சு பேட்டி!

தமிழகத்தில் நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது போல மக்கள் ஆர்வத்துடன் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இது தடுப்பூசி திருவிழாவாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் உத்தரவுப்படி இதுவரை நடத்தப்பட்ட மூன்று கட்ட முகாம்களில், இலக்கையும் தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்ட முகாமில் 20 லட்சம் பேருக்கும், இரண்டாம் கட்ட முகாமில் 16 லட்சம் பேருக்கும், 26 லட்சம் பேருக்கு மூன்றாம் கட்ட முகாமிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நான்காம் கட்ட முகாமில் ஏறக்குறைய 20,000 முகாம்கள் அமைக்கப்பட்டு ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை 20 லட்சம் பேர் இருப்பதாக ஒன்றிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருக்கிறது. இவற்றில் 10 லட்சம் பேருக்கு கடந்த முகாமில் செலுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 10 லட்சம் நபர்களுக்கு இன்று நடைபெறும் முகாமில் செலுத்தப்பட்டு விடும் என எதிர்பார்க்கபடுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழக - கேரள மாநில எல்லையில் உள்ள குமுளி சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு நடத்தினார்.

அப்போது குமுளியில் தமிழக அரசின் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் கோரிக்கை விடுத்து, தற்காலிகமாக போக்குவரத்து பணிமனையில் செயல்படும் பேருந்து நிலையத்தை பார்வையிட அழைத்துச் சென்றார். அதனை ஏற்று அப்பகுதியையும் அமைச்சா் ஆய்வு செய்து அரசின் கவணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

Also Read: சேற்றில் சிக்கி இறந்த குட்டி யானை.. 48 மணி நேரமாக தாய் யானை உட்பட 3 யானைகள் நடத்திவரும் பாசப்போராட்டம்!