Tamilnadu

கணவனை ஏமாற்றி பெற்ற குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற கொடூரத் தாய்: பகீர் சம்பவத்தின் பின்னணி!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்குத் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயமலர் என்பவருடன் 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயமலர் தனது கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்துவிட்டார்.

பின்னர் மனைவி மற்றும் குழந்தையைப் பார்ப்பதற்காக மணிகண்டன் தூத்துக்குடி சென்றுள்ளார். அப்போது வீட்டில் குழந்தை இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மனைவி ஜெயமலரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அவர் சரியான பதில் சொல்லாமல் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து குழந்தை குறித்து அக்கம்பக்கத்தில் விசாரணை செய்துள்ளார். இதில் குழந்தையை விருதுநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ், அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோர் உதவியுடன் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், இது குறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தாய் ஜெயமலர் உட்பட ஆறு பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே தனது குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குடும்ப தகராறு... அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை: விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!