Tamilnadu

தமிழ்நாட்டில் வருகிறது ’திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்டம்’ : திமுக அரசை பாராட்டிய சென்னை ஐகோர்ட்

சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

அப்போது ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் ரவுடிகளால் போலிஸார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்திருந்த நீதிமன்றம், ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் வைத்து புதிய சட்டம் எப்போது இயற்றப்படும் என்பது குறித்து பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, "திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்டம்" என்ற பெயரில் வரைவு மசோதா தயாராக உள்ளதாகவும் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட வரைவு மசோதா தயாராக இருப்பதாக தெரிவித்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இது சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்

Also Read: “இனி வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது” : அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!