Tamilnadu

ஜோதிகா படத்தால் வெளிவந்த உண்மை: சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

சென்னை ராயபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பிராட்வே ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தங்களது 9 வயது மகளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராயபுரத்தில் உள்ள கணவரின் மாமா வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து ஐந்து மாதங்கள் கழித்து சிறுமியை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமி வீட்டில் தொலைக்காட்சியில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தில் வரும் காட்சிகளை பார்த்துள்ளார். அதில் தாயிடம் எதையும் மறைக்க கூடாது என வசனங்கள் வருவதை கண்டார்.

இதனையடுத்து, தனது அம்மாவிடம் உறவினரான கணேசன் தன்னை வீட்டில் வைத்து கட்டிபிடித்து, முத்தம் கொடுத்தாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஓராண்டாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி ராஜலட்சுமி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் வழங்கவும் பரிந்துரை செய்து உத்தரவுவிட்டுள்ளார்.

Also Read: ”இதெல்லாம் ஜோதிகா பேசியதால் நிகழ்ந்த மாற்றம்” - தஞ்சை மருத்துவமனையின் இப்போதைய நிலை என்ன? இயக்குநர் தகவல்