Tamilnadu

கிலோ கணக்கில் தங்கம்: பறிமுதல் செய்த பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- கே.சி.வீரமணி மீது இறுகும் பிடி!

அ.தி.மு.க ஆட்சியின்போது வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அளிக்கப்பட்ட புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 34 லட்சம் ரொக்கப் பணம், சுமார் 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டாலர், முக்கிய சொத்து மற்றும் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 5 கம்ப்யூட்டர்கள், 5 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் ஆகியவவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அமைச்சரின் வீட்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய மணலையும் சோதனையின்போது கண்டறிந்தனர்.

கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தரம் பிரிக்கும் பணியையும், மொத்த மதிப்பீடு கணக்கிடும் பணியையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் மேற்கொண்டனர்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

இதன் மூலம், கே.சி.வீரமணியிடம் விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.