Tamilnadu

“5 வயது குழந்தையை கொடூரமாக தாக்கி அடித்துக் கொலை செய்த அக்கா” : சென்னையில் பகீர் சம்பவம் - என்ன நடந்தது?

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி சூசைமேரி. இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் தங்களின் 8 வயதாகும் இரண்டாவது குழந்தை கீர்த்தியையும் , 5 வயதாகும் மூன்றாவது குழந்தை ஆபேல் ஆகிய இருவரையும் பீர்க்கன்காரணையில் உள்ள சூசைமேரியின் அக்கா டார்த்தி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். குழந்தைகள் அங்கு வளர்ந்து வந்தன.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு டார்த்தி உயிரிழந்தார். இதனால் டார்த்தியின் மகள் மேரி இரண்டு குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தை ஆபேலை மேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, மருத்துவர்களிடம் குழந்தை வீட்டில் திடீரென மயங்கி விழுந்தாக கூறினார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஆபேல் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். மேலும் ஆபேல் உடலில் தீக்காயம், நகக்கீறல் இருந்ததால் இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பீர்க்கன்காரணை போலிஸார் இது தொடர்பாக மேரியிடம் விசாரணை நடத்தினர். இதில் ஆபேல் குறும்புத்தனம் செய்ததால் அவனை அடித்து, சூடுவைத்து சித்திரவதைச் செய்தாக கூறியதை கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் சம்பவத்தன்று சிறுவனைக் கொடூரமாகத் தாக்கி, தலையைப் பிடித்து சுவரில் மோதியுள்ளார். இதில் ஆபேல் மயங்கி விழுந்துள்ளான். ஆனால் சிறிது நேரத்தில் எழுந்து விடுவான் என மேரி நினைத்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆபேல் எழுந்திருக்கவில்லை. இதனால் விளையாடும்போது தவறி விழுந்து மயங்கி விழுந்துவிட்டதாக உறவினர்களிடம் கூறியதாக மேரி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குறும்புத்தனம் செய்ததால் தம்பியை அக்கா அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “கணவரை இழந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி ரூ.13 லட்சம் மோசடி” : விவாகரத்து வழக்கில் அதிர்ச்சி சம்பவம்!