Tamilnadu

“திருச்சியில் மருத்துவ மாணவர் தற்கொலை” : வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இளநிலை மருத்துவம் பயின்று வந்தார் ரஞ்சித்குமார். இந்நிலையில் நேற்று இரவு ரஞ்சித்குமாரின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த விடுதி மாணவர்கள் அவரது அறையின் பின்பக்க ஜன்னலைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது, ரஞ்சித்குமார் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாணவர் தற்கொலை குறித்து போலிஸார் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில், கடந்த தேர்வில் இரண்டு பாடங்களில் ரஞ்சித்குமார் தோல்வியடைந்துள்ளார். மேலும் இவருடன் படித்த மற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக பணிக்குச் செல்ல உள்ளனர். இதனால் இவர் மன உளைச்சலில் இருந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.

ரஞ்சித்குமார் தேர்வில் தோல்வியடைந்ததால்தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சேர்ந்து வாழ விரும்பாத மனைவி; தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவர் - சென்னை ஐஸ்ஹவுஸில் பயங்கரம்!