Tamilnadu
“ஒரு மாணவனின் மரண வலியை வைத்து அரசியல் செய்வது அநாகரிகம்” - அதிமுகவை சாடிய கனிமொழி எம்பி!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளினையொட்டி சென்னை அண்ணா நகரிலுள்ள அன்னை சத்யா நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய கனிமொழி எம். பி., "பெண்களுடைய முன்னேற்றத்தில், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறையோடு பல திட்டங்களை ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் கலைஞர் கொண்டு வந்தார். பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தது திராவிட இயக்கம்தான். அதே வழியில் திமுக ஆட்சியில்தான் பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அது திருமணத்திற்காக உதவ மட்டுமல்ல; அந்த நிதிவுதவியை பெற கல்வித்தகுதியை வரையறுத்தன் மூலம் பெண்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டது. சமத்துவத்தை பேணுவது தான் திராவிட இயக்கத்தின் கோட்பாடு. அதனால் தான் இன்றைக்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
அதேபோல இன்னொரு சிறப்பான திட்டமாக பெண்கள் இலவசமாக அரசு பேருந்தில் செல்லலாம் என்பது கொண்டு வரப்பட்டுள்ளது. இது வெறும் இலவச திட்டம் இல்ல. இன்றைக்கு கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார நெருக்கடியின் தவிக்கிறது. பொதுவாக குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது பெண்களின் படிப்பை நிறுத்துவது போன்றவை தான் நடக்கிறது. அதையெல்லாம் தடுக்கவே பெண்களுக்கு பேருந்தில் கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதனால் வெளியுலகுக்கு பெண்கள் அதிகம் வருகிறார்கள்.
இத்தகைய புதுப்புது திட்டங்களை நாள்தோறும் வழங்கிவரும் இந்த நல்லாட்சி தொடர அனைவரும் உழைக்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தது போல வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்" என்றார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் தொடர்ச்சியாக இன்றைக்கு தளபதி அவர்களின் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய கனவுகளெல்லாம் நினைவாகிக் கொண்டிருக்கின்றன. மறுபடியும் வளர்ச்சி பாதையில் செல்லக்கூடிய தமிழகத்தை, சாதி, மத மாச்சரியங்களை கடந்து ஒற்றுமையாக இருக்கக்கூடிய தமிழகத்தை தளபதி அவர்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
நீட் தேர்வை பொறுத்தவரை, அரை மனதோடு கண் துடைப்புக்காக ஒரு முயற்சி எடுத்ததற்கும், முழுமனதோடு தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பற்றிய அக்கறையோடு தமிழ்நாட்டில் உள்ள சுகாதாரத்துறையின் செயல்பாடு, மக்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கண் துடைப்புக்காக நடவடிக்கை எடுத்தது அதிமுக ஆட்சி.
மாணவர்களின் நலனுக்காக சமூக நீதிக்காக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பது தளபதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. தொடர்ந்து முயற்சிகள் எடுப்போம். போராடுவோம். நீட்டில் இருக்கக்கூடிய அநியாயமான சூழலை உச்ச நீதிமன்றத்துக்கும், ஒன்றிய அரசுக்கும் உணர்த்துவோம். அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்பது தான் தளபதி ஏற்றிருக்கும் உறுதி.
ஒரு மாணவரின் மரணம் என்பது அனைவருக்கும் வலி ஏற்படுத்துவது. அதை பயன்படுத்தி அரசியல் செய்வது அநாகரீகமானது. நீட் யாருடைய ஆட்சியில் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது என்பது அதிமுகவினருக்கே நன்றாக தெரியும். எனவே இந்த தேர்வுகள் நிச்சயம் விலக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இருந்து உலகளவில் கொண்டாடப்படும்; மதிக்கப்படும் மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். நீட்டால் மட்டும் நல்ல மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்றில்லை. அது அடித்தட்டு மற்றும் வாய்ப்புகள் அற்ற மாணவர்களிடம் இருந்து அவர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் செயல் தான் என்பதை உணர வேண்டும்" என்றார்.
Also Read
-
“Covishield தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படும்” - மருந்து நிறுவனத்தில் அறிவிப்பால் ஷாக் - பின்னணி என்ன?
-
”மோடி தொடர்ந்து பேச பேச பாஜக படுதோல்வி அடைவது உறுதி” : செல்வப்பெருந்தகை!
-
பாலியல் புகார் : பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
-
”போலி வீடியோக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே பதிலடி!
-
தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!