Tamilnadu

“முன்னாடியே 3 கல்யாணம்.. மேட்ரிமோனி மூலம் மோசடி" - நகை, பணத்துடன் தப்பிய கணவர் மீது பெண் புகார்!

நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவான கணவர், தனக்கு முன் மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக தாம்பரம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் வாணி (39). இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு நகை, பணத்துடன் கணவர் தலைமறைவானதாக புகார் அளித்துள்ளார்.

அவரது புகார் மனுவில், “மேட்ரிமோனி இணையதளம் வாயிலாக, பிரேம் ராஜ் என்பவர் கடந்தாண்டு எனக்கு அறிமுகமானார். வடபழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்தாண்டு அக்டோபரில் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்தின்போது எனது பெற்றோர் எனக்கு 30 சவரன் தங்க நகைகள் அணிவித்தனர். ஜனவரி 2021ஆம் ஆண்டு திருமண வரவேற்பு வைத்து கொள்ளலாம் எனக் கூறிய பிரேம்ராஜ் தெற்கு ரயில்வே ஒப்பந்த பணிகளில் பணம் வரவில்லை எனக்கூறி எனது 30 சவரன் நகைகளை வாங்கிக்கொண்டார்.

பின்னர் என்னை மிரட்டி, ஆதார் கார்டு மற்றும் கையெழுத்தை பெற்று, வங்கிகள் மற்றும் கடன் தரும் நிறுவனங்கள் வாயிலாக, 20 லட்சம் ரூபாயும், என் நண்பர்களிடம் 5 லட்சம் ரூபாயையும், என் பெயரில் கடனாக பெற்றார்.

மேலும், என்னைப் போலவே மேலும் மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். நான் போலிஸில் புகார் அளிக்க வருவதை அறிந்து மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளார்.

அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அவர் வாங்கிய கடன்களில் இருந்த, என்னை விடுவிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

புகாரைப் பெற்ற போலிஸார், பிரேம்ராஜை கைது செய்து விசாரிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

Also Read: MBBS சீட்டு வாங்கித் தருவதாக கூறி முன்னாள் இராணுவ வீரர் மோசடி.. கணவரை இழந்த பெண் கண்ணீர் மல்க புகார்!