Tamilnadu

“என் சாவுக்கு மனைவியும் மாமியாரும்தான் காரணம்” : ஆடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை - நடந்தது என்ன?

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பள்ளிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (34). இவரது மனைவி இந்துமதி (22). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதி மதுராந்தகம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். விநாயகமூர்த்தி மலேசியாவில் வேலை செய்து வந்தார்.

இந்துமதிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக தகவல் அறிந்த விநாயகமூர்த்தி மலேசியாவிலிருந்து கடந்த பொங்கலின்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஜனவரி 17ஆம் தேதி இந்துமதி தனது தாய்வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற விநாயகமூர்த்தி, இந்துமதியின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்றுள்ளார். இதுதொடர்பாக ஒலக்கூர் போலிஸார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்துமதி வேலை செய்யும் நிறுவனத்திற்குச் சென்று குழந்தையை பார்க்க வேண்டும் என விநாயகமூர்த்தி தனது மனைவியிடம் மன்றாடியுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த விநாயகமூர்த்தி, நேற்று மதியம் அவரது விவசாய நிலத்திற்கு சென்று செல்போனில், “எனது சாவுக்கு என் மனைவி மற்றும் மாமியார்தான் காரணம்” என ஆடியோ பதிவு செய்துவிட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று மாலை அவ்வழியாகச் சென்றவர்கள் உடலை பார்த்து ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே விநாயகமூர்த்தியின் தந்தை ஏழுமலை, தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக போலிஸில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Also Read: “உணவுப் பொருளில் மாட்டுக்கறி கலப்படமா?” : மதவெறி கும்பலின் வாட்ஸ்அப் வதந்தியால் அதிர்ச்சி - உண்மை என்ன?