Tamilnadu

முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய கொடநாடு எஸ்டேட் மேனேஜர்.. அதிரடி விசாரணைக்கு 5 தனிப்படைகள் அமைப்பு!

கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் காலை 11 மணி முதல் பிறபகல் 1.15 மணி வரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மறுவிசாரணை கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் துணை காவல் கண்காணிப்பு சுரேஷ், கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் சயான், கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது நடராஜன் கூறிய வாக்குமூலத்தை வீடியோ பதிவாக காவல்துறையினர் பதிவு செய்தனர். காவல்துறையின்ர் நடராஜனிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் விசாரணையில் காவல்துறைக்கு திருப்தி இல்லாததால், மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது உடனடியாக ஆஜராக வேண்டுமென காவல்துறையினர் நடராஜனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு விசாரணைக்கு வரும்போது எஸ்டேட் மேலாளர் நடராஜன் தனது வழக்கறிஞருடன் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க இன்று 5 தனிப்படைகளை அமைத்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை தற்கொலை செய்துகொண்ட தினேஷ் குமாரின் தந்தை போஜன் உட்பட பலரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Also Read: கொடநாடு காவலாளி கொலை வழக்கு விசாரணையில் ‘திடுக்’ தகவல்.. மர்மத்தை கண்டறிய நேபாளம் பறக்கும் போலிஸ்!