Tamilnadu

5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த முதியவர்: குட்கா வழக்கு விசாரணையில் வெளிவந்த உண்மை!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் குளிர்பானக்கடை நடத்தி வருபவர் பெருமாள். இவரது கடையில் குட்கா விற்கப்படுவதாக டி.பி.சத்திரம் போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலிஸார் பெருமாளின் கடைக்குச் சென்று சோனை செய்தனர்.

அப்போது 30 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்த போலிஸார் பெருமாளை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் விசாரணையில் பெருமாள் வாய் திறக்கதாததால் அவரது செல்போனை பறிமுதல் செய்து போலிஸார் சோனை செய்தனர். அப்போது அதில் சில சிறுமிகளிடம் அவர் ஆபாசமாக நடந்துகொண்ட வீடியோக்கள் இருந்தன.

இதனையடுத்து போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவரின் கடைக்கு அருகில் உள்ள பெண் ஒருவருடன் பெருமாளுக்கு தவறான உறவு இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது அந்த பெண் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம், அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து ரசித்து வந்துள்ளார் பெருமாள்.

அந்தச் சிறுமி தனது அம்மாவிடம் கூறியும் அவர் அதனைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதேபோல் அவரது கடைக்கு அருகில் வசிக்கும் 4 சிறுமிகளுக்கு பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதற்காக சிறுமியின் அம்மாவிற்கு 500 - 1000 என அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரிவந்தது.

மேலும் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தவுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருநங்கையான தம்பி.. வீட்டிற்கு அழைத்து வந்து கொன்ற அண்ணன் - சேலம் அருகே பயங்கர சம்பவம்!