Tamilnadu

கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை : இந்து அமைப்பு நிர்வாகி மீது புகார் - போலிஸ் தீவிர விசாரணை!

பா.ஜ.க மாநிலச் செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கே.டி.ராகவன் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு நிர்வாகி மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரன். இவர் இந்து அமைப்பு ஒன்றின் மாவட்ட நிர்வாகியாக உள்ளார். மேலும் தனது பகுதியில் கோவில் ஒன்று நடத்தி வருகிறார்.

இந்த கோவிலுக்கு வரும் பெண்களிடம் தோஷம், நோய், குடும்ப கஷ்டத்தை போக்குவதாகக் கூறி தவறாக நடந்து வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளிடம் ஜெகதீஸ்வரி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எனது கணவர் உடல் நலமின்றி இறந்துவிட்டார். மகனுக்கும் உடல்நிலை சரியில்லை. இதனால் ராஜேஷ்வரன் நடத்தும் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அப்போது எல்லாம் நன்றாகப் பேசி நீங்களும், உங்க மகனும் கோவிலில் தங்கிக்கொள்ளுங்கள் என கூறினார்.

நாங்களும் அங்கே தங்கினோம். பிறகு ஆசை வார்த்தைகள் கூறி அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். மேலும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து என்னுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். திடீரென அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், ராஜேஷ்வரன் செல்போனை பரிசோதனை செய்தபோது, பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை செல்போனில் பதிவு செய்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

மேலும் இந்த வீடியோவை காட்டி பெண்களிடம் பணம் பறிந்தும் வந்துள்ளார். இது குறித்து இரணியல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். ராஜேஷ்வரன் இந்த அமைப்பில் நிர்வாகியாக இருப்பதால் போலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஆபாச வீடியோ சர்ச்சை: பதவி விலகிய கே.டி.ராகவன் - யூடியூபர் மதன் வீடியோ வெளியிட்டதன் பின்னணி என்ன?