Tamilnadu

கவரிங் நகையை கொடுத்து வாடிக்கையாளரை ஏமாற்றிய வங்கி மேலாளர் : 23 சவரனை அபேஸ் செய்தது விசாரணையில் அம்பலம்!

சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் தர்மன். கல்லூரி பேராசிரியாக இருந்து ஓய்வு பெற்றவர் தர்மன். இவர் அதேபகுதியில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது 23 சவரன் நகையை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.

பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் அடகு வைத்த நகையை மீட்டு வங்கி லாக்கரில் வைத்திருக்கிறார். இந்நிலையில் லாக்கரில் இருந்த பணத்தை மீட்டு மீண்டும் அடகு வைக்க தர்மன் முயன்றுள்ளார். அப்போது நகைக்கடை மதிப்பீட்டாளர் அவை அனைத்து போலி நகை என தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்து வங்கி மேலாளரிடம் விசாரித்த போது முறையாக பதிலளிக்காமல் அலட்சியம் செய்துள்ளார். இதனையடுத்து தர்மன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், வங்கியின் முன்னாள் மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர், தர்மனின் தங்க நகைகளை லாக்கரில் இருந்து எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: லாரியில் கட்டிவைத்து சாலையில் இழுத்து சென்ற கொடூரம் : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பழங்குடியினர் கொடூர கொலை!