Tamilnadu

சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய இளைஞர்.. மாட்டிவிட்ட தாய் : கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெங்கடாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சாவித்திரி. இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு வீட்டில் ஏதோ சத்தம் கேட்டு சாவித்திரி எழுந்து பார்த்துள்ளார்.

அப்போது, வீட்டின் மேல் கூரை ஓடு பிரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிலிருந்த பீரோவும் திறக்கப்பட்டிருந்தது. பின்னர் பீரோவைச் சோதனை செய்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த 3 லட்சத்து 90 ரூபாய் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சாவித்திரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சாவித்திரியின் இரண்டாவது மகன் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர், அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் கூரையைப் பிரித்து தான் பணம் திருடியதாக ஒப்புக்கொண்டார். இதைக் கேட்டு போலிஸாரும், அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு, போலிஸார் ஆனந்தராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொந்த வீட்டிலேயே மகன் திருடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உஷார் மக்களே.. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் வேலை எனக் கூறி 30 பெண்களிடம் மோசடி : அதிர்ச்சி சம்பவம்!