Tamilnadu

ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்ட ஆலை அதிபர்.. கடத்தல் கும்பலை வலைவீசிப் பிடித்த போலிஸார்.. பரபர சம்பவம்!

காங்கேயம் அருகே பிரபல அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு, இரண்டு கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் திருமண மண்டபம் வைத்துள்ள இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.

தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தியின் மகன் சிவபிரதீப் (25), அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தொழில் நிமித்தமாக காங்கேயம் அருகே ஓர் இடத்தை பார்வையிடுவதற்கு சென்றபோது அந்த இடத்தில் வைத்து அவரை, அவரது காரோடு கடத்திய ஒரு கும்பல், பின்னர் அவரது பெற்றோரிடமிருந்து ரூபாய் 3 கோடி பணத்தை கேட்டு மிரட்டியது.

இதனையடுத்து அவரது பெற்றோர் காவல்துறைக்கு தெரிவிக்காமல் கடத்தல் கும்பலுக்கு 3 கோடி ரூபாய் கொடுத்து மதுரை அருகே மகனை மீட்டனர். மகனை பத்திரமாக மீட்ட பின்னர் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஈஸ்வரமூர்த்தி புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், டி.எஸ்.பி குமரேசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த ஏழு குற்றவாளிகளில் அகஸ்டின், பாலாஜி, சக்திவேல் ஆகிய மூன்று பெயரை மதுரையில் வாகன சோதனையின் போது கைது செய்தனர். கைதானவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கிருஷ்ணகிரியில் ஒருவரையும் தூத்துக்குடியில் ஒருவரையும் கைது செய்துள்ள நிலையில் இவ்வழக்கில் மேலும் இருவரை போலிஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் 2 குற்றவாளிகளை கைது செய்யும் போது மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்வோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: காணாமல் போன சிறுவனை 5 மணி நேரத்தில் மீட்ட போலிஸார்... கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ்அப்!