Tamilnadu

காணாமல் போன சிறுவனை 5 மணி நேரத்தில் மீட்ட போலிஸார்... கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ்அப்!

உலகில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எத்தனையோ குற்றங்கள் நடந்துவந்தாலும் அவ்வப்போது இந்த தொழில்நுட்பங்கள் மக்களுக்கு உதவியாகவும், ஆபத்தில் இருந்து காக்கும் கருவியாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், காணாமல் போன நான்கு வயது சிறுவனை வாட்ஸ்அப் உதவியால் போலிஸார் மீட்ட சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ராம். இவரது மகன் அங்குஸ் குமார். நான்கு வயது சிறுவனான அங்குஸ்குமார் வீட்டிற்கு வெளியே நேற்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர், பெற்றோர் வெளியே வந்து பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

இதையடுத்து, இதுகுறித்து போலிஸாரிடம் புகார் கொடுத்தனர். வழக்கைப் பதிவு செய்த போலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தனர்.

மேலும், சிறுவனின் புகைப்படத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர். ஆட்டோவிலும் போலிஸார் சிறுவனின் புகைப்படத்தை ஒட்டி தேடி வந்தனர்.

சிறுவன் காணாமல்போன ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு பல்லாவரம் போலிஸாருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு காணாமல் போன சிறுவன் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த நபரின் இருப்பிடத்திற்குச் சென்று போலிஸார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன சிறுவனை ஐந்து மணி நேரத்திலேயே மீட்ட போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: உஷார் மக்களே... "தேர்வு எழுதணும்.. ஒரு நம்பர் மாறிடுச்சு என பேசினால் நம்பாதீங்க" : போலிஸ் எச்சரிக்கை!