Tamilnadu

நெடுங்குளத்தில் தப்பித்த பழனிசாமி... கொடநாடு வழக்கில் சிறை உறுதி : எடப்பாடியின் ‘பகீர்’ கொலை பின்னணி!

கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்டு, எடப்பாடியின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருக்கும் வெல்ல உற்பத்தியாளர்களிடம், வெல்ல மூட்டைகளை வாங்கி, அவற்றை 2 ரூபாய் கமிஷனுக்குச் சந்தைகளில் விற்று தொழில் செய்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி.

வெல்ல வியாபாரியாக இருந்தவருக்கு, அ.தி.மு.க அமைச்சர் செங்கோட்டையனுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக கோனேரிப்பட்டி கிளைச் செயலாளர் பதவி கிடைத்தது. பின்னர், அரசியலில் பல்வேறு வழிகளில் வளர்ந்த இவர் முதலமைச்சரும் ஆனார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே, பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், நில விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டனர்.

அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மாயமானார்கள். அந்த வழக்கில் தேடப்பட்டவர்களில் ஒருவர் தான் எடப்பாடி பழனிசாமி.

இந்த வழக்கில் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. பின்னர் சாட்சிகள் பல்டி அடிக்க, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இப்படியான ‘கொடூர’ கொலைப் பின்னணி கொண்ட எடப்பாடி பழனிசாமிதான், தனது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி ஆவணங்களைத் திருடுவதற்காக கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளையில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.

கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொள்ளை நடைபெற்றது. காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அப்போது அ.தி.மு.க தொடர்பான ஆவணங்கள் மாயமாகின.

இச்சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கோவையைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே கனகராஜ் சேலம் அருகே சாலை 'விபத்தில்' உயிரிழந்தார்.

அதேநாளில் கோவை - பாலக்காடு சாலையில் இரண்டாவது குற்றவாளியான சயான் தனது மனைவி குழந்தையுடன் காரில் சென்றபோது மர்ம வாகனம் மோதியதில் சயானின் மனைவி, குழந்தை ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் நடைபெற்று ஒரே வாரத்தில் கொடநாடு கணினி பொறியாளர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைதான மற்றவர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழனிசாமியின் நண்பரும் அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் கூடலூர் சஜீவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால் அப்போது முறையாக விசாரணை நடைபெறாத நிலையில் தற்போது சயானிடம் மீண்டும் போலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொடநாடு கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய தகவல்களை வாக்குமூலமாக அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் கொடநாடு கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகள் சேர்த்துள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் 2 பேர் அப்ரூவர்களாக மாறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பான கொலை வழக்கில் தப்பித்த எடப்பாடி பழனிசாமி, அரசியலில் பெரும் உச்சங்களை அடைந்த பின்னர் நடந்த கொலை விவகாரத்தில் சிக்கியுள்ள நிலையில் விரைவில் சிறைக்குச் செல்லவிருக்கிறார்.

Also Read: தொட்டால் உதிரும் சிமெண்ட்டை கண்டுபிடித்த ஓ.பி.எஸ்.. விரைவில் கிரிமினல் நடவடிக்கை?