Tamilnadu

அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்ற 29 ஓதுவார்கள் உட்பட 58 பேர் பல்வேறு கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் வழங்கினார்.

இந்நிலையில், இத்திட்டத்தால் ‘புண்பட்ட’ சிலர் கோயில்களில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் அகற்றப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டதாக திட்டமிட்டு அவதூறு பரப்பி வந்தனர்.

பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, “கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு யார் கொடுத்தது?” என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியில் இருந்து அப்புறப்படுத்தப்படவில்லை. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது. சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, “தமிழ்நாடு அர்ச்சகர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் அர்ச்சகர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அகற்றும் திட்டம் எதுவும் இல்லை. 60 வயதை கடந்து ஓய்வு பெறும் அர்ச்சகர்களுக்கு தகுந்த பணி வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "நீங்கதானே வாக்குறுதியை நிறைவேத்த சொன்னீங்க” : அ.தி.மு.கவினரை பங்கம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!