Tamilnadu

“வயசுதானே ஆச்சு.. படிக்கிற ஆர்வம் போகல” : 63 வயதில் டிப்ளமோ படிக்கும் முன்னாள் ராணுவ வீரர்!

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (63). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் அரசு பாலிடெக்கினில் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் (டிஇஇஇ) படிப்பில் சேர உள்ளார். இதற்காக தனது சான்றிதழ்களை பாலிடெக்னிக் நிர்வாக அலுவலகத்தில் நேற்று அளித்தார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பரமசிவம், அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு படிப்பதற்கு ஆசை இருந்தும், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக, 1978ஆம் ஆண்டு, தனது 19 வயதிலேயே இந்திய இராணுவத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர், சிக்கிம், உத்தர பிரதேசம் என வட மாநிலங்களில் 30 ஆண்டுகள் பணியில் இருந்துள்ளார். கடந்த 2008-ல் சுபேதார் மேஜர் பணியில் ஓய்வு பெற்றவுடன் புதுச்சேரி வந்த பரமசிவம், பி.எஸ்.என்.எல்-லில் காவல் பணியில் தொடங்கி ஏ.எப்.டி மில்லில் காவல் பணி செய்கிறார்.

இவருக்கு 3 பிள்ளைகள். முதல் பெண் தற்போது எம்.டி.எஸ் படிக்கிறார். இரண்டாவது மகன் தற்போது ராணுவத்தில் பணியாற்றியபடி எம்.எஸ் படிக்கிறார். 3-வது மகள், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சுற்றுலாப் படிப்பு படித்து விட்டு, தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், எப்படியாவது மேற்கொண்டு படிக்க வேண்டும் என கடந்து 2 ஆண்டுகளாக புதுச்சேரி அரசின் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்துள்ளார் பரமசிவம். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டும் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார் பரமசிவம்.

தற்போது 63 வயதாகும் பரமசிவத்துக்கு தற்போது அரசு பாலிடெக்னிக்கில் டி.இ.இ.இ சேர சீட் கிடைத்துள்ளது. கற்பதற்கு வயது ஒருபோதும் தடையல்ல என நிரூபித்திருக்கிறார் பரமசிவம்.

Also Read: "தி.மு.க அரசு அதிவேகமாகச் செயல்பட்டதே 100 நாட்களின் அடையாளம்” : The New Indian Express புகழாரம்!