Tamilnadu

"தமிழ்நாட்டின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை" : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்க நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று சட்டப்பேரவையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1,650 இடங்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி எனும் மகத்தான திட்டத்தைக் கொண்டுவந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழ்நாட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2011ல் முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தபோதே 6 மருத்துவக் கல்லூரிகள் நிர்வாக ஒப்புதல், இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்பிறகுதான் ஆட்சி மாற்றம் நடந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் 11 மருத்துவக் கல்லூரிகளும் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாகத்தான் 11 மருத்துவக் கல்லூரிகளிலும் முதலமைச்சரின் அறிவுரைப்படி நேரடி ஆய்வு செய்யப்பட்டது.

பல்வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு ரிவைஸ் எக்ஸ்டென்ஷன் அதாவது சில மாற்றங்கள் கொண்டு வருவதற்காக தீர்மானம் செய்யப்பட்டது. முதலமைச்சரின் அறிவுரைப்படி டெல்லிக்கு சென்றபோது தோன்றிய ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரிடம் இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினோம்.

அதுமட்டுமல்லாமல் ஒரு மருத்துவக் கல்லூரியில் 156 மாணவர்கள் சேர்க்கை என்பதற்கு ஏற்ப 11 மருத்துவ கல்லூரிக்கு 1,650 மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினோம்.

11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு 1650 மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

Also Read: எதிர்நிலைச் சக்திகளின் ஆசையில் மண்ணைப்போட்டு மூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!