Tamilnadu

மக்களே உஷார் : “1 லட்சம் கொடுத்தால் 1 கோடி” - ஆசைவார்த்தை கூறி 500 பெண்களை ஏமாற்றிய மோசடி கும்பல்!

ஈரோடு மாவட்டம் மோளக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னபூரணி. இவர் சோலார் பகுதியில் தறிப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், சோலார் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் மேலாளராக உள்ள ஒருவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏராளமான பெண்களிடம், பழைய இடி தாக்கிய இரிடியம் கலசத்தை, வாங்கி வெளிநாட்டிற்கு விற்றதில், ரூபாய் 2 கோடி வரை பணம் வரவுள்ளதாகவும், அதனால் இந்த பணத்தை தனி நபருக்கு தராமல் அறக்கட்டளையில் உறுப்பினராகச் சேரும் பெண்களுக்கு தங்கள் பங்காக ஒரு லட்சம் முதலீடு செய்தால், ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய ஏராளமான பெண்கள் அறக்கட்டளையில் இனைந்துள்ளனர். நான் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 கொடுத்துள்ளேன் என்றும் மேலும் 517 பேர் இதேபோல் பல கோடி கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அதில், இந்த கும்பல் தமிழ்நாடு முழுவதும் கிளை ஆரம்பித்து இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

மேலும் இவர்கள், ஒன்றிய - மாநில அரசு மற்றும் ரிசர்வ் வங்கி முத்திரைகளையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே இவர்களை கைது செய்து அவர்கள் மோசடி செய்த பணத்தை மீட்டு தரவேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இதுதான் பா.ஜ.க வெற்றி ரகசியமா..? : 10,000 போலி வாக்காளர் அட்டைகளை உருவாக்கி மோசடி... உ.பி.யில் பகீர்!