Tamilnadu

4 டன் பாமாயிலை திருடிவிட்டு, தண்ணீர் கலந்து மோசடி... எண்ணெய் நிறுவனம் அதிர்ச்சி!

புதுச்சேரி, வில்லியனூரில் தனியார் நிறுவனத்தின் ஆயில் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னையில் உள்ள எண்ணெய் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் நிறுவனத்திடம் எண்ணெய் ஆர்டர் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள பாமாயில் தொழிற்சாலையில் ரூபாய் 40 லட்சத்திற்கு 29 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய்யைக் கொள்முதல் செய்து டேங்கர் லாரி மூலம் புதுச்சேரிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி அனுப்பி வைத்தது.

டேங்கர் லாரியை கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவருக்கு உதவியாக பாலசுப்பிரமணியன் என்பவர் இருந்துள்ளார். 27ஆம் தேதி வரவேண்டிய லாரி புதுச்சேரிக்கு வரவில்லை. இதனால் புதுச்சேரியில் உள்ள ஆயில் நிறுவனம் சென்னையில் உள்ள நிறுவனத்திடம் இது குறித்துக் கேட்டுள்ளது.

பின்னர், லாரி எங்கிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, சென்னை மாதவரம் பகுதியில் டேங்கர் லாரி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்றுபார்த்தபோது லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் இல்லை. இதையடுத்து மாற்று ஓட்டுநரைக் கொண்டு லாரி புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து லாரியில் உள்ள எண்ணெய்யை ஆயில் நிறுவன அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 டன் எண்ணெய் திருடப்பட்டு, அதற்குப் பதில் தண்ணீர் கலந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான எண்ணெய் வீணாகியுள்ளது.

இதுகுறித்து ஆயில் நிறுவன இயக்குனர் கேசவய்யா வில்லியனூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டேங்கர் லாரி ஓட்டிவந்த கருப்பசாமி, கிளீனர் பாலசுப்ரமணியன் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “திருமணமான ஒரே வருடத்தில் காதல் மனைவியை குத்திக்கொன்ற கணவன்” : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!