Tamilnadu

“தேம்பித் தேம்பி அழுத சிறுவன்” : ஆதரவற்றோர் இல்லத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

தஞ்சாவூரில், ஆதரவற்றோர் விடுதியில் பல நாட்களுக்குப் பின் தனது சகோதரியைப் பார்த்த மகிழ்ச்சியில் தம்பி கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூரில் உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில், மாணவர்கள் தனியாகவும், மாணவியர் தனியாகவும் விடுதிகளில் தங்கிப் பயின்று வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், விடுதியிலேயே அடைபட்டு மன இறுக்கத்தில் உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மாணவர்களிடையே பேசி மகிழ்வித்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக மாணவர்களும், மாணவியரும் ஒரே இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது அரவிந்தன் (14) என்ற மாணவன் அழுது கொண்டிருந்தான். ஆசிரியர்கள் விசாரித்தபோது, “என் அக்கா மீனாவை பார்த்து இரண்டு வாரம் ஆகிவிட்டது, அவளைப் பார்க்க வேண்டும்” எனக் கலங்கியவாறு கூறியுள்ளான்.

இதையடுத்து, ஆசிரியர்கள், அரவிந்தனை அவனது அக்கா மீனா அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர வைத்தனர். பல நாட்களுக்கு பின் அக்காவை பார்த்ததும், அரவிந்தன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரோபோ சங்கர், “அரசு குழந்தைகள் இல்ல மாணவர்களிடம் மன இறுக்கத்தை போக்கி, ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்வை துவக்கியுள்ளேன்.

தமிழகம் முழுதும் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த உள்ளேன். இந்த விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களில் ஐந்து பேரின் உயர்கல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Also Read: “வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!