Tamilnadu

"இன்னொரு ஆப்பு இருக்கு.. 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து விரைவில் அறிக்கை" : நிதியமைச்சர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது.

இந்நிலையில் சட்டப்பேரவையில், விவாதத்தின் போது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார், அ.தி.மு.க ஆட்சியில் பொருளாதார நெருக்கடியிலும் விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், நிதிநிலை அறிக்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் பேசினார்.

இதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துப் பேசுகையில், "2006, 2007ம் ஆண்டு மாநில உற்பத்தியிலிருந்த கடன் 18% ஆக இருந்தது. அ.தி.மு.க ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடனை குறைத்தார். ஆனால் கடந்த ஆட்சியில் மாநில உற்பத்தி கடன் 27% ஆக உயர்ந்துவிட்டது.

கடந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் மட்டுமல்லாது பழைய திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் போனதாலேயே கடன் சுமை அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்து விரைவில் பேரவையில் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

Also Read: “சொன்னீங்களே... செஞ்சீங்களா?” : வாக்குறுதிகளை பட்டியலிட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு முதலமைச்சர் பதிலடி!