Tamilnadu

ஃபேஸ்புக்கில் பழகி ஏமாற்றிய இளைஞன்... தேடி வந்த கேரள இளம்பெண் ‘மர்ம’ மரணம் - காரணம் என்ன?

கிருஷ்ணகிரி அருகே முகம் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த கேரள இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்கொட்டாய் பகுதியில் முகம் எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடந்துள்ளது. அவ்வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் படி காவேரிப்பட்டணம் போலிஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முகம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சனி (25) என்பது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சூர்யா (22) என்ற வாலிபர், ஐந்து வருடங்களாக பேஸ்புக்கில் ரஞ்சனியுடன் பழகிவந்துள்ளார். கார் டிரைவரான சூர்யா கேரளாவிற்கு சென்று நகை, பணத்தை வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பின் ரஞ்சனியுடன் தொடர்பை துண்டித்த சூர்யா, வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். சூர்யாவை தேடி ரஞ்சனி அவரது ஊருக்கு வந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, கேரளாவுக்கு திரும்பாமல் காவேரிப்பட்டிணம் சூப்பர் மார்கெட்டில் கடந்த நான்கு மாதங்களாக வேலை பார்த்து வந்த நிலையில், நேற்று முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: இதுதான் பா.ஜ.க வெற்றி ரகசியமா..? : 10,000 போலி வாக்காளர் அட்டைகளை உருவாக்கி மோசடி... உ.பி.யில் பகீர்!